சென்னை: இணையம் வழி நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்க இயலாமல் தென்மாநிலங்களைச் சேர்ந்த 94 விழுக்காடு மாணவர்கள் தவித்து வருவதாக அண்மைய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி மையங்களும் மூடப்பட்டுள்ளன. இணையம் வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், குழந்தைகள் உரிமை அமைப்பான 'க்ரை' ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது. 11 முதல் 18 வயதுக்குட்பட்ட சுமார் 6 ஆயிரம் மாணவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய நான்கு தென்மாநிலங்களைச் சேர்ந்த 94 விழுக்காடு மாணவர்களிடம் திறன்பேசிகள் இல்லை என்பதும், ஆறு விழுக்காடு மாணவர்கள் மட்டுமே தற்போது இணையம் வழியிலான வகுப்புகளில் முழுமையாகப் பங்கேற்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
29 விழுக்காடு மாணவர்கள் தங்கள் வீட்டில் உள்ளவர்களின் கைபேசிகளை தான் பயன்படுத்துகின்றனர்.
அந்த மாணவர்களில் 55 விழுக்காட்டினர் வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே கைபேசி பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.
ஒட்டுமொத்தத்தில் 77 விழுக்காடு மாணவர்கள் நாளொன்றுக்கு 2 மணி நேரத்துக்கும் குறைவாகத்தான் திறன்பேசிகளைப் பயன்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இது மிகுந்த கவலை அளிப்பதாக ஆய்வை நடத்திய அமைப்பு தெரிவித்துள்ளது.
இணையம் வழி பள்ளி வகுப்புகளை நடத்துவதற்குப் பல்வேறு மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

