புதுடெல்லி: காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக வேண்டும் என்று ராகுல் காந்தி எம்பி தெரிவித்துள்ள கருத்தை தானும் வரவேற்பதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
அத்தகைய தலைவரின் வழிகாட்டுதலில் செயல்பட தாம் ஆர்வத்துடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
'இந்தியாவின் அடுத்த தலைமுறை தலைவர்கள்' என்ற புத்தகத்தில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பிரியங்கா காந்தி தெரிவித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் போராடி பெற்ற சுதந்திரமும் கட்டமைத்த தேச நலனும் அழிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள பிரியங்கா, இத்தகைய நிலையைக் கண்டு தம்மால் சும்மா இருக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
தாம் அரசியலில் ஈடுபட இதுவே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"காந்தி குடும்பத்திலிருந்து யாரும் காங்கிரஸ் தலைவராகக்கூடாது என்று ராகுல் தெரிவித்த கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். காங்கிரஸ் கட்சி இனி தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
"அதற்கு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் கட்சித் தலைவராக வேண்டும்," என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

