புதுடெல்லி: மூன்று விமான நிலையங்களைத் தனியாரிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
மேலும் அடுத்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் நூறு புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்கெனவே ஆறு விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மேலும் ஆறு விமான நிலையங்களைத் தனியாருக்கு குத்தகை அடிப்படையில் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அந்த முடிவின்படி தற்போது ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் விமான நிலையங்கள் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமான நிலையங்களை ஒப்பந்த அடிப்படையில் நிர்வகிக்க அதானி குழுமம் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவித்தார்.
ஒப்பந்த அடிப்படையில் மத்திய அரசும் அதானி குழுமம் சார்பான நிர்வாக அமைப்பும் இணைந்து விமான நிலையங்களை நிர்வகிக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர் ஹர்தீப் சிங், இத்தகைய நடவடிக்கையின் மூலம் இந்திய விமான நிலையங்கள் உலகத் தரத்துக்கு உயரும் என்றார்.
இதற்கிடையே திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைப்பதற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் கேரள அரசு ஒத்துழைப்பது மிகக் கடினம் என அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக முடிவெடுத்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.

