புதுச்சேரி: இந்துக்களின் முக்கிய விழாவான விநாயகர் சதுர்த்தி இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் கிருமிப் பரவல் காரணமாக கொண்டாட்டத் துக்கு தமிழகத்திலும் புதுச்சேரியிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
புதுவையில் பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது இடங்களிலும் கோவில்களின் முன்பும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சிலை ஊர்வலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அவரவர் வீடுகளில் சிறிய அளவிலான சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே விநாயகர் சிலை கள் வைத்து வழிபடவும் ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தடையை விலக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
என்றாலும் சென்னையில் மெரினா கடற்கரையைத் தவிர்த்து பிற நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கலாம் என நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நிலையில் சிலைகளை செய்யும் கைவினைக் கலைஞர்கள் விநாயகர் சிலைகளை பல்வேறு வடிவங்களில் உருவாக்கி விற்பனைக்கு அனுப்பியுள்ளனர்.
வீடுகளில் வைத்து வழிபடும் வகையில் 2 அடி அளவுக்கு குறைவான உயரம் உள்ள சிலைகளுக்கு வண்ணம் தீட்டி விற்கப் படுகின்றன.
புதுவை கொசக்கடைத்தெரு, முருங்கப்பாக்கம், வில்லியனூர், கோரிமேடு அடுத்த பட்டானூர் ஆகிய பகுதிகளில் கைவினை கலைஞர்கள் களிமண்ணால் விநாயகர் சிலைகளை செய்து விற்று வருகின்றனர்.
அவர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து சிலைகளை உருவாக்கியுள்ளனர். பொதுமக்களும் தங்களுக்கு விருப்பமான சிலை களை தேர்வு செய்து ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
“ ‘விநாயகனே வெவ்வினையே வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான்-விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினாற் கண்ணிற் பணிமின் கணிந்து’ என்ற 11ஆம் திருமுறைப் பாடலை குறிப்பிட்டு, முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானின் அவதாரத் திருநாளில் மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து, அருகம்புல், எருக்கம் பூ உள்ளிட்ட பல பூக்களுடன், பழங்கள், கரும்பு, அவல் போன்றவற்றை வைத்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்வார்கள்.
“கணங்களின் தலைவனான விநாயகப் பெருமானின் திருவருளால் மக்கள் வாழ்விலும் இன்பம் பெருகி நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும்,” என்று திரு பழனிசாமி வாழ்த்தி யுள்ளார்.