மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான இணையவழி புத்தாக்க பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 37 மருத்துவர்கள் உட்பட நாடு முழுவதிலும் இருந்து 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முகாமில் இந்தி மொழியில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டதால் தங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்றும் ஆங்கிலத்தில் வகுப்பு நடத்துமாறும் தமிழக மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர்.
“ஆனால் ஆயுஷ் அமைச்சின் செயலர் வைத்திய ராஜேஷ், தமிழக மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்காததுடன் இந்தி புரியாதவர்கள் வகுப்பை விட்டு வெளியேறலாம் என்று செருக்குடன் கூறியுள்ளார். இந்தி புரியாதவர்கள் தொடர்ந்து பிரச்சினை செய்தால் அவர்கள் மீது தமிழக அரசின் தலைமைச் செயலர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டி உள்ளார். இதே கொடுமை ஆந்திரம், தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்களுக்கும் நடந்துள்ளது,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவர்களை அவமானப்படுத்தி, மிரட்டிய மத்திய ஆயுஷ் அமைச்சின் செயலருக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
செயலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதவேண்டும் என அறிக்கை ஒன்றில் அவர் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய ஆயுஷ் அமைச்சின் செயலருடைய நடவடிக்கைகள் அதிகார அத்துமீறலின் உச்சக்கட்டம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்தி பேசுபவர்கள்தான் இந்தியாவின் எஜமானர்கள் போலவும் தென் மாநில மொழிகளைப் பேசுபவர்கள் கொத்தடிமைகள் போலவும் மத்திய அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்களால் கருதப்படுவது ஆபத்தானது, ஜனநாயகப் பண்பற்றது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஆயுஷ் அமைச்சின் செயலருடைய செயல்பாட்டுக்கு திமுக எம்பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இத்தகைய செயல்பாடு மத்திய அரசின் இந்தித் திணிப்புக் கொள்கையைப் பிரதிபலிப்பதாக உள்ளது என டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
“இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக அந்தச் செயலர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இன்னும் எத்தனை நாள்தான் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதைப் பொறுத்துக் கொள்ளப் போகிறோம்,” என்று கனிமொழி தமது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.