திருவனந்தபுரம்: அதானி குழுமத்துக்கு திருவனந்தபுரம் விமான நிலைய பராமரிப்பு குத்தகை வழங்கப்படுவதை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கேரள அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
திருவனந்தபுரம் விமான நிலையத்தை பராமரிப்பதற்கான ஐம்பதாண்டுக்குரிய குத்தகையை அதானி குழுமம் பெற்றுள்ளது.
அண்மையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின்போது ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், கவுகாத்தி விமான நிலையங்களின் பராமரிப்புக் குத்தகையை பொதுத்துறை, தனியார் கூட்டுமுயற்சி அடிப்படையில் அதானி குழுமத்துக்கு அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், இதற்கு கேரள அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மட்டும் கலந்துகொள்ளவில்லை.
கேரள அரசு இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளும் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேரள சட்டப்பேரவையைக் கூட்டி மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்நிலையில் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கேரள அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முடிவுக்குத் தடை விதிக்குமாறு கேரள அரசின் மனுவில் கோரப்பட்டுள்ளது.

