இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 மில்லியனைக் கடந்தது. உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.
கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 69,239 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி அங்கு 3,044,940 பேர் பாதிப்புக்குள்ளாகினர். இதுவரை 56,706 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் 65,000ஐ கடந்த வண்ணம் உள்ளது. அதிவேகமாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளைவிட இந்தியாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சுமார் 1.3 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் கடந்த வாரத்தில் கிருமித்தொற்று எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை 292,174 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 6,231 பேர் உயிரிழந்தனர். கடந்த வாரத்தில் கிருமித்தொற்று அங்கு 1% உயர்ந்தது.
முன்பு புதுடெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வந்த கிருமித்தொற்று, தற்போது மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள கிராமப்புறங்களிலும் அதிகரித்து வருகிறது. ஆனால், அந்த கிராமங்களில் போதிய அளவுக்கு மருத்துவ வசதிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.