ஹைதராபாத்: கடந்த பத்து ஆண்டுகளில் தம்மை 143 பேர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாக தெலுங்கானாவைச் சேர்ந்த ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.
இது மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும் இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஹைதராபாத் போலிசார் தெரிவித்துள்ளனர்.
ஷீலா என்ற அந்தப் பெண்ணுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு திருமணமானது. அதன் பின்னர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 20 பேர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் தம்மை பலாத்காரம் செய்ததாகவும் திருமணமான ஓராண்டிலேயே தமக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்றும் அந்தப் பெண் தெரிவித்துள்ளார்.
விவாகரத்துக்குப் பிறகு தாய்வீடு திரும்பிய அவர், தனது மேற்படிப்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அரசியல் பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோருடன் சில மாணவர்களும் தம்மைப் பாலியல் பலாத்காரத்துக்கு உட் படுத்தியதாக போலிசில் அளித்த புகாரில் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பலாத்காரம் செய்யப்படும்போது சிகரெட்டால் சூடு வைப்பது உள்ளிட்ட சித்திரவதைகளுக்கும் தாம் ஆளானதாக அவர் விவரித்தள்ளார்.
அந்தப் பெண் பலரால் மிரட்டப்பட்டதாகவும் அதன் காரணமாகவே இதுவரை புகார் அளிக்கவில்லை என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தலித் வன்கொடுமைச் சட்டம், பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தப் பெண் ஏன் இவ்வளவு தாமதமாகப் புகார் செய்துள்ளார் எனும் கேள்வி எழுந்துள்ளது.
வேறு ஏதேனும் காரணத்துக்காக அவர் சில விஷயங்களை மிகைப்படுத்துகிறாரா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பி உள்ளனர்.
எனினும் இதுபோன்ற கேள்விகளுக்கு விசாரணையின் முடிவில்தான் பதில் கிடைக்கும் என ஹைதராபாத் காவல்துறை தெரிவித்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது ஒரு பெண் பாலியல் பலாத்கார புகார் அளித்திருப்பது சமூக வலைத்தளங்களில் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

