புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை அடியோடு புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் சார்பில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகினார் ராகுல் காந்தி. தலைவர் பதவியில் நீடிக்குமாறு கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் அவர் அதை ஏற்கவில்லை.
இதையடுத்து சோனியா காந்தி இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி இளையர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறவேண்டி உள்ளது என்றும் இளைய தலைமுறையின் வாக்கு வங்கியை கட்சி இழந்து வருவதாகவும் மூத்த தலைவர்கள் 23 பேர் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, அரசியல் களத்தில் முழு வீச்சில் செயல்படக்கூடிய தலைவர்களுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் கட்சியை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சோனியாவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ஐந்து மாநில முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், நடப்பு எம்பிக்கள் உள்ளிட்ட 23 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
நாட்டில் மதம் சார்ந்த அரசியலால் ஏற்பட்டுள்ள அச்சம், பாதுகாப்பின்மை, பொருளாதாரப் பின்னடைவு, வேலை வாய்ப்பின்மை தொடர்பாக காங்கிரசின் நிலைப்பாட்டை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என வலியுறுத்தி உள்ள மூத்த தலைவர்கள், கட்சியைப் பலப்படுத்த அனைத்து அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இக்கடிதத்தில் மாநிலங்களவை, எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர்கள் கபில் சிபல், ஆனந்த் சர்மா, முன்னாள் முதல்வர்கள் பூபேந்திர சிங், வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். இதற்கிடையே இன்று சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.

