புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றுக்காக தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களை விட கொவிட்-19 நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகம் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே நேற்று முன்தினம் புதிதாக மேலும் 61,408 பேருக்கு கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3.1 மில்லியனைக் கடந்துள்ளது. இதுவரை 57,542 பேர் பலியாகி உள்ளனர்.
"இதேவேளையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் சுமார் 57 ஆயிரம் பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2.33 மில்லியனாக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் சுமார் ஏழு லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்," என்று மத்திய அரசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மும்பையில் தற்போது 171,859 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 488,271ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சுமார் 22 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.
கர்நாடகாவில் சுமார் 83 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 189,564 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4,683ஆக உள்ளது. ஆந்திராவில் சுமார் 89 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 260,087ஆக உள்ளது. அங்கு மூன்று ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொவிட்-19 நோய்க்கு பலியாகி உள்ளனர்.
உலகளவில் கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாமிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 22 ஆயிரம் பேரும் தமிழகத்தில் சுமார் 6,400 பேரும் மூன்றாமிடத்தில் உள்ள கர்நாடகாவில் 4,616 பேரும் பலியாகி உள்ளனர்.

