பெங்களூரு: கொரோனா கிருமித் தொற்று விவகாரம், வடகர்நாடகாவில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளுக்கு மத்தியில் கர்நாடக மாநில மக்கள் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடி உள்ளனர்.
எனினும் இந்தாண்டு மக்கள் மத்தியில் வழக்கமான உற்சாகம் காணப்படவில்லை. மிக எளிமையான முறையில் இப்பண்டிகை கொண்டாடப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு கர்நாடக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொது இடங்களில் அதிகபட்சமாக நான்கு அடி உயர சிலைகளை மட்டுமே வைக்க முடியும் என்றும் பெங்களூரு நகரில் ஒரு வார்டுக்கு ஒரு சிலை மட்டுமே வைக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.
பிள்ளையார் சிலைகளைக் கரைப்பதற்கு என பெங்களூரு மாநகராட்சி சார்பில் தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வடகர்நாடகாவில் 11 மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழ்நிலை காரணமாக இம்முறை பிள்ளையார் சதுர்த்தி அன்று கோவில்களில் பக்தர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
வழக்கமாக ஆயிரம் பக்தர்கள் கூடும் கோவில்களில் அதில் சரிபாதிக்கும் குறைவான பக்தர்களே காணப்பட்டதாக ஊடகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
பிள்ளையார் சிலைகள், பூ, பழங்கள் ஆகியவற்றை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் இதன் காரணமாக 400 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

