புதுடெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து தம்மை மாற்றுவதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்களை சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
கட்சித் தலைமையை மாற்றியமைக்க கோரி 23 மூத்த தலைவர்கள் எழுதிய கடிதத்தில், தலைவர் பதவி குறித்து கூட்டு முடிவெடுக்க வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து கட்சிக்குப் புதிய தலைவரை தேர்வு செய்யுமாறு சோனியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக வேண்டும் என பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது சோனியாவும் தலைவர் பதவியில் நீடிக்க மறுத்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார்.
எனினும் தம்மால் ஓராண்டு மட்டுமே இப்பதவியில் நீடிக்கமுடியும் என்றும் அதற்குள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் தாம் குறிப்பிட்ட ஓராண்டு காலம் நிறைவடைந்ததை அடுத்து பதவியில் இருந்து விலகுவதாக அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை ஒட்டுமொத்தமாக புதுப்பிக்க வலியுறுத்தி 23 மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதி உள்ளனர். இதற்கு சோனியாவின் ஆதரவாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

