உலகம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 26.2 விழுக்காட்டினர், அதாவது நால்வரில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.
இதே காலகட்டத்தில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் இந்தியாவின் பங்கும் 16.9% என சற்று கூடியது.
இதனிடையே, இன்றுபுதிதாக 60,975 பேரை கொரோனா தொற்றியது. இதையடுத்து, இந்தியாவில் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 3,167,323ஆக உயர்ந்தது.
அதேபோல, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 848 பேர் கிருமித் தொற்றால் பலியானதை அடுத்து மாண்டோர் எண்ணிக்கை 58,390ஆக அதிகரித்தது.
இருப்பினும், பாதிக்கப்பட்டோரைக் காட்டிலும் தொற்றிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை இன்று அதிகமாக இருந்தது. மேலும் 66,550 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டுவிட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது.
தொற்றிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 2,405,585ஆக, அதாவது 75.91 விழுக்காடாக உயர்ந்தது.
இதுவரை கிட்டத்தட்ட 36 மில்லியன் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதாவது, நாட்டின் மக்கள்தொகையில் ஒரு மில்லியன் பேருக்கு 26,016 என்ற விகிதத்தில் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
உலக சுகாதார நிறுவனத் தகவலின்படி, இம்மாதம் 4ஆம் தேதியில் இருந்து இந்தியாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.