புதுச்சேரி: இலவச சிகிச்சை தொடர்பாக புதுச்சேரி மக்களைக் குறை சொன்ன துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்காதவர்கள் இலவச மருத்துவ சிகிச்சை வழங்கும்படி கேட்பதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று அண்மையில் கிரண் பேடி சாடியிருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த புதுச்சேரி பாஜக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சாமிநாதன், அந்தக் கருத்து மத்திய அரசுக்குக் களங்கம் விளைவிப்பதாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
"துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மக்களை நேரடியாகக் குறைசொல்வது தவறான செயல். ஏழைகளும் நடுத்தர மக்களும் பல மாதங்களாக வருமானமின்றித் தவித்து வரும் நிலையில் அவர்கள் எப்படி இலவச சிகிச்சை வழங்கும்படி கேட்கலாம் என்ற ஆளுநரின் கருத்து தேவையில்லாத சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இலவச மருத்துவமே இல்லாது போனால் என்ன செய்வது என்று அவர் பேசுவது ஏற்புடையதாக இல்லை," என்று சாமிநாதன் கருத்துரைத்துள்ளார்.

