கீரிக்கும் பாம்புக்கும் சண்டை கேள்விப்பட்டிருப்போம்; இரண்டில் ஒன்று பிழைக்கும்.
ஆனால், வம்புதும்புக்கெல்லாம் போகாத கழுதையால் கடிபட்ட பாம்பும், பாம்பால் கடிபட்டு கழுதையும் இறந்துபோன சோகம் ராஜஸ்தானில் நிகழ்ந்திருக்கிறது.
பிரதாப்கார் மாவட்டத்தில் மாஹி ஆற்றங்கரையில் கடந்த செவ்வாய்க்கிழமை புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்தது கழுதை. புல்லோடு சேர்ந்து ஒரு பாம்பும் அந்தக் கழுதையின் வாயில் சிக்கிக்கொண்டது.
வேறுபாடு தெரியாமல், கழுதை அந்தப் பாம்பை விழுங்கிவிட்டது. வித்தியாசமாக எதையோ விழுங்கிவிட்டதை உணர்ந்த கழுதை, பலவாறு முயற்சி செய்து, அந்தப் பாம்பை வெளியேற்ற முயற்சி செய்தது.
ஆனால், பாம்பை முழுமையாக கக்க முடியவில்லை. பாதி அளவுக்கு கழுதையின் வாயிலிருந்து வெளியில் வந்த பாம்பு, ஆபத்தை எண்ணி கழுதையைப் பல முறை கொத்தியது. வலி தாங்காமல் துடித்த கழுதையின் வாயில் அகப்பட்ட பாம்பும் கடிபட்டது.
நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, இரண்டுமே உயிரிழந்தன.
அந்தப் பகுதி வழியாக நடைப்பயிற்சிக்காகச் சென்ற சிலர் இந்தக் காட்சியைப் புகைப்படமாக்கி சமூக ஊடகங்களில் பதிவிட்டனர்.
பார்த்ததும் படையே நடுங்கக்கூடிய நிலையில், பாம்பை கழுதையின் வாயிலிருந்து விடுவிக்க யாரும் முற்படவில்லை என்பது பெரும் சோகம்.


