இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சர்கள் உட்பட 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா கிருமிப் பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ள வேளையில், மத்திய, மாநில அரசுகள் கிருமிப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளன.
பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
அங்கு நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு அங்கு 117 எம்எல்ஏக்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அமைச்சர்கள் உட்பட இதுவரை 23 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலை என்றால், பொதுமக்களின் தொற்று நிலை எவ்வளவு கடுமையானது என்பதை கற்பனை செய்துகொள்ளலாம் எனக் குறிப்பிட்ட அவர், தேர்வு மையங்களுக்குச் சென்று மாணவர்கள் தேர்வெழுதும் சூழ்நிலை இல்லை என்றார்.
மருத்துவப் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வை இந்தியா முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்.
அதேபோல் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜேஇஇ மெயின் நுழைவுத்தேர்வும் செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
கொரோனா காரணமாக இந்தத் தேர்வுகளைத் தள்ளிவைக்குமாறு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதேபோல் இந்த தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமையும், தேர்வு அட்டவணையை மாற்ற முடியாது என்று கூறிவிட்டது.
இவற்றைக் குறிப்பிட்டே, தேர்வு மையங்களுக்குச் சென்று மாணவர்கள் தேர்வெழுதும் சூழ்நிலை இல்லை என்று பஞ்சாப் முதல்வர் தெரிவித்தார்.