புதுடெல்லி: கொரோனா விவகாரம் முடிவுக்கு வராத நிலையில் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வையும் பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ தேர்வையும் நடத்த வேண்டும் என நாடு முழுவதிலும் இருந்து 150 கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தேர்வை ஒத்தி வைக்க வாய்ப்பே இல்லை என தேசிய தேர்வு முகமையும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே தேர்வு எழுதுவதற்காக ஹால்டிக்கெட்டை 14 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பணியாற்றும் 150க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள நிலையில், தேர்வுகளை நிறுத்தி வைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட காங்கிரஸ் இடைக்காலத் தலைவி சோனியா காந்தி, நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென மீண்டும் வலியுறுத்தினார்.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நுழைவுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதில் நாடு முழுவதிலும் இருந்து 14 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.
பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பஞ்சாப், சட்டீஸ்கர், புதுவை முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய சோனியா காந்தி, மத்திய அரசு நுழைவுத் தேர்வுகள் விவகாரத்தில் அலட்சியமாக நடந்து கொள்வதாக சாடினார்.
இதையடுத்து ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இரு நுழைவுத் தேர்வுகள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.
இதற்கிடையே நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை 99.4 டிகிரிக்கு மேல் இருந்தால் அவர்கள் உடனடியாக தனியறையில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.