புதுடெல்லி: கட்சியின் மூத்த தலைவர்கள் பல மாதங்களாக ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டது காங்கிரஸ் இடைக்காலத் தலைவி சோனியா காந்தியை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அண்மையில் மூத்த தலைவர்கள் 23 பேர் அவருக்கு அனுப்பிய கடிதம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கடிதம் தொடர்பாக அத்தலைவர்கள் ஐந்து மாதங்கள் ரகசியமாக ஆலோசனை நடத்தியது தெரியவந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியை தலைமை முதல் அடிமட்டம் வரை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என குலாம் நபி ஆசாத், கபில்சிபல், மணிஷ் திவாரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதற்கு சோனியாவின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அப்போது, மூத்த தலைவர்களின் கடிதத்தைப் படித்தால் தனது தாயார் சோனியா மனம் வேதனைப்படும் என்றும் அதனால் கடிதத்தைப் படிக்க விடாமல் தாம் தடுத்து விட்டதாகவும் ராகுல் காந்தி கூறியதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
மேலும் சோனியா காந்தியைச் சந்திக்க மூத்த தலைவர்கள் பலமுறை முயன்றபோதும் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்றும் அதன் காரணமாகவே கடிதம் எழுதும் திட்டம் உருவாக்கப்பட்டது என்றும் மூத்த தலைவர்களில் ஒருவர் தெரிவித்ததாக ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து ஐந்து மாதங்களாக ரகசிய ஆலோசனை நடத்தி உள்ளனர். கடிதத்தில் குறிப்பிட வேண்டிய விஷயங்களை முடிவு செய்த பின் முழு கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

