பெங்களூரு: மெட்ரோ ரயில் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் இடம்பெற்றுள்ள இந்தி வார்த்தைகளை நீக்கவேண்டும் என கன்னட வளர்ச்சி ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
இல்லையெனில் பெங்களூரு ரயில் நிலைய பெயர்ப் பலகைகளில் 22 இந்திய மொழிகளும் இடம்பெற வேண்டும் என மெட்ரோ நிர்வாகத்துக்கு அந்த ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
பெங்களூருவில் உள்ள ரயில் நிலையங்களில் 'நம்ம மெட்ரோ' அறிவிப்புப் பெயர்ப் பலகைகளில் கன்னடம், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகள் இடம்பெற்றுள்ளன.
பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் கன்னட வளர்ச்சி ஆணையத்தின் தலைவர் நாகப்ஹரனா நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, ரயில் நிலைய பெயர்ப் பலகைகளில் இந்தி அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக ஆணையத்துக்குப் புகார்கள் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
சில பெயர்ப் பலகைகளில் இந்தி நீக்கப்பட்டாலும் இன்னும் பல பலகைகளில் இந்தி வார்த்தைகள் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
"பெங்களூரு ரயில் சேவையை தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் பயன்படுத்துவதால் பெயர்ப் பலகைகளில் 22 இந்திய மொழிகளை சேர்க்க வேண்டும்.
"இல்லையெனில் இந்தி மொழியை நீக்கவேண்டும். கன்னடம், ஆங்கில மொழிகளை மட்டுமே பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயன்படுத்த வேண்டும்," என நாகப்ஹரனா வலியுறுத்தி உள்ளார்.
இதையடுத்து பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி வார்த்தைகளை நீக்குவதாக பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் உறுதி அளித்ததாகவும் இது தொடர்பாக நவம்பர் மாதம் அந்நிர்வாகம் அறிக்கை அளிக்க இருப்பதாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

