மருத்துவர்கள், தாதியர், மருத்துவமனை ஊழியர்கள் 570க்கு மேல் உயிரிழப்பு
இந்தியா முழுவதும் 87,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், தாதியர் உள்ளிட்ட சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் கொவிட்-19 கிருமித்தொற்றால் அவதிப்படுவதாக 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' தெரிவித்து உள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய ஆறு மாநிலங்களில் அத்தகைய பணியாளர்களின் பாதிப்பு அதிகமாக உள்ளது என்கிறது அந்தத் தகவல். பாதிக்கப்பட்டோரில் 74 விழுக்காட்டினர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
மேலும், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு 573 சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் உயிரிழந்துவிட்டதாகவும் மரண எண்ணிக்கையில் 86 விழுக்காடு இந்த ஆறு மாநிலங்களில் நிகழ்ந்துள்ளதாகவும் அரசாங்கத் தகவலை மேற்கோள் காட்டி 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்த பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
அத்துடன் கிருமி தொற்றிய பணியாளர்களில் கால்வாசிக்கும் (28%) மேற்பட்டோர் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறது அச்செய்தி.
மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய ஒவ்வொரு மாநிலத்திலும் நேற்று முன்தினம் வரை நூறாயிரம் சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டபோது கிருமி தொற்றியோர் அடையாளம் காணப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் 24,484, கர்நாடகாவில் 12,260, தமிழ்நாட்டில் 11,169 சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்களுக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்களில் ஏராளமான மருத்துவர்கள், தாதியர், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர் அடங்குவர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பணியாளர்களின் எண்ணிக்கை மகாராஷ்டிராவில் 292, டெல்லியில் 51, தமிழ்நாட்டில் 49, கர்நாடகாவில் 46.
ஆக அதிகமான சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பொது சுகாதார நிபுணர்கள் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள்.
முன்களப் பணியாளர்கள் இவ்வாறு அதிகமாக பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் கொள்ளைநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஊறு விளைவிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
முன்களப் பணியாளர்கள் சந்தித்து வரும் பேராபத்து குறித்து கடந்த வியாழக்கிழமை மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
எளிதில் கிருமி தொற்றக்கூடிய பணியில் ஈடுபட்டு இருப்பதால் சுகாதாரப் பராமரிப்பு பணியாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எடுத்துரைத்ததாக அதிகாரி ஒருவர் கூறினார்.
மாண்டோர் 1.81%; மீண்டோர் 76.47%
இந்நிலையில், இந்தியா முழுவதும் கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,463,973ஆக உயர்ந்துள்ளது.
சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 76,472 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 1,021 பேர் உயிரிழந்துவிட்டனர்.
இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62,550ஆக உயர்ந்துள்ளது. தினமும் ஆயிரம் பேருக்கு மேல் கிருமித்தொற்றால் உயிரிழப்பது தொடருகிறது. இருப்பினும் உயிரிழப்பு 1.81% என்றும் குணமடைந்தோர் விகிதம் 76.47% என்றும் சுகாதாரத் துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
எல்லா மாநிலங்களையும் சேர்ந்த 2,648,999 பேர் கிருமித்தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பி உள்ளனர். வெள்ளிக்கிழமை மட்டும் 65,050 பேர் நோயிலிருந்து மீண்டனர்.

