திருப்பதி: உலகின் செல்வம் கொழிக்கும் ஆலயங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகத்துக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய இக்கோவிலில் பக்தர்கள் நன்கொடையாக அளிக்கும் தொகை அதிகம் என்பதால் நிர்வாகச் செலவுகள் போக எஞ்சிய தொகை வங்கியில் இருப்பு வைக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. கொரோனா கிருமித்தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவில் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. 80 நாட்களுக்குப் பின் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், தொற்று அச்சுறுத்தல் காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் உண்டியல் உள்ளிட்ட கோவிலின் இதர வருவாய் கடுமையாக சரிந்துவிட்டது. திருமலை கோவிலில் 23,000த்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுவதாகக் கூறப்படுகிறது.
அவர்களுக்கு மாதச் சம்பளம் வழங்குவது உள்ளிட்ட இதர கோவில் நிர்வாகச் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து நிர்வாகச் செலவுகளை சமாளிப்பது தொடர்பாக திருமலை திருப்பதி ஆலய அறக்கட்டளை வாரிய குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆலய அறக்கட்டளை வாரியத் தலைவர் சுப்பா ரெட்டி, "திருமலை கோவிலுக்குச் சொந்தமான 12,000 கோடி ரூபாய் நிதி பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு முறையில் முதலீடு செய்யப்பட்டு முதிர்ச்சி அடைந்ததும் வட்டி பெறப்பட்டு வந்தது.
"தற்போது ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியைச் சமாளிக்க இந்த முதலீடுகளை மாத முறைக்கு மாற்றி ஒவ்வொரு மாதமும் வட்டி பெற்று அதை கோவில் நிர்வாகச் செலவுகளுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது," என்று கூறினார்.

