புதுடெல்லி: மத்திய அரசுப் பணிகளில் முஸ்லிம்கள் அதிக அளவில் சேர்ந்துள்ளார்கள் என்பது குறித்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிய சுதர்ஷன் தொலைக்காட்சிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது.
சுதர்ஷன் சேனல் அண்மையில் ஒரு நிகழ்ச்சி குறித்த விளம்பரக் காணொளி ஒன்றை ஒளிபரப்பியது. அதில் மத்திய அரசுப் பணிகளில் அண்மைய காலமாக முஸ்லிம்கள் அதிகரித்துள்ளனர் உள்ளிட்ட பல்ேவறு சர்ச்சைக் கருத்துகளை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சார்பில் சுதர்ஷன் சேனல் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் வெறுப்பைத் தூண்டும்வகையிலும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராகவும் இந்த நிகழ்ச்சி இருக்கிறது என மனுவில் தெரிவித்தனர். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், சுதர்ஷன் சேனல் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்ய வெள்ளிக்கிழமை தடை விதித்து, சேனலின் நிர்வாக ஆசிரியர் சுரேஷ் சவாங்கே, அரசுக்குப் பதில் அளிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், அந்தத் தடையை விலக்கக் கோரி சுதர்ஷன் சேனல் சார்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த டெல்லி நீதிபதி அசோக் சாவ்லா, "தகவல் அமைச்சின் கடிதத்திற்கு தொலைக்காட்சி சார்பில் விளக்கம் அளிக்காததால் தடையை நீக்க முடியாது என்று மனுவைத் தள்ளுபடி செய்து வழக்கை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

