தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஐந்தில் ஒருவருக்கு, அதாவது 21.5 விழுக்காட்டினருக்கு கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு இருந்திருக்கலாம் என அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சி, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐசிஎம்ஆா்) தேசிய தொற்று நோயியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து நடத்திய 'செரோ' எனப்படும் ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
மக்களின் ரத்த மாதிரிகளை சோதனைக்குட்படுத்தி அதில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறன் (ஆன்டிபாடிக்ஸ்) உருவாகி உள்ளதா என்பதைக் கண்டறியும் இந்த ஆய்வு ஜூலை 18 முதல் 28-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், சென்னையின் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 51 வாா்டுகளில் 7,217 குடும்பங்களைச் சேர்ந்த 10 வயது முதல் 60 வரை உள்ள 12,405 பேரின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்பட்டன.
இதில் 2,673 (21.5%) பேருக்கு, அதாவது ஐவரில் ஒருவருக்கு கொரோனா கிருமி பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
பரிசோதனை செய்யப்பட்டவா்களில் 1,115 ஆண்களுக்கும் 1,538 பெண்களுக்கும் மூன்றாம் பாலினத்தவா்கள் ஐவருக்கும் கிருமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா கிருமியால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 1.75 மில்லியன் வரை அதிகரிக்கும் எனவும் சென்னை மக்கள்தொகையில் 80% எளிதில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
"இவ்வாய்வின்படி சென்னை மக்கள்தொகையில் 21.5 விழுக்காட்டினருக்கு ஜூலை இறுதிக்குள் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளது எனக் கணிக்கலாம்," என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ் கூறினார்.
"இப்போது, சென்னை மக்கள் தொகையில் அதிகமானோருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் (ஒப்பீட்டளவில்) கிருமித்தொற்று பரவல் விகிதம் குறையும் என எதிர்பார்க்கலாம்," என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, இந்தியாவில் நேற்று முன்தினம் பொது முடக்கம் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு சிறப்பு விமானங்களில் வருபவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தும் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து புறப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்ட சான்றிதழ்களுடன் வருபவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளலாம். மருத்துவச் சான்றிதழ் இல்லாமல் வருபவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மாநிலத்துக்குள் பயணியர் ரயில் சேவைக்கும், மாவட்டங்களுக்கு இடையே அரசு, தனியார் பேருந்துப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்திய நகரங்களுக்கிடையிலான விமானப் போக்குவரத்தும் விரைவில் முழுமையாகச் செயல்படவுள்ளது.

