இந்தியாவில் இதுவரை இல்லாத விதமாக கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83,883 பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகினர். இதையடுத்து, ஒட்டுமொத்த பாதிப்பு 3,853,406ஆக அதிகரித்தது.
கொரோனா தொற்றால் மேலும் 1,043 பேர் மரணமடைந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 67,376ஆக உயர்ந்தது.
அதே நேரத்தில், தொற்றிலிருந்து மீண்டோர் விகிதமும் 77.06 விழுக்காடாக ஏற்றம் கண்டது. அதுபோல, உயிரிழப்பு விகிதமும் 1.75 விழுக்காடாகக் குறைந்தது.
இதனிடையே, தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. ஆக அதிகமாக, நேற்று 1.17 மில்லியன் பரிசோதனைகள் இடம்பெற்றன. அதாவது, ஒரு மில்லியன் பேருக்கு 28,000 என்ற விகிதத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ள பிரேசில் நான்கு மில்லியன் பாதிப்புகளை நெருங்கிவிட்டது. அதைவிட, ஏறத்தாழ 150,000 பின்தங்கியுள்ள இந்தியா இன்னும் சில நாட்களில் பிரேசிலை முந்திவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.11 மில்லியன் தொற்றுச் சம்பவங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது.