13 நாட்களில் ஒரு மில்லியன் கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

13 நாட்களில் ஒரு மில்லியன் கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

3 mins read
dd9b0c09-39c8-4d8b-81b5-e1a21dfeaae4
மும்பையில் உள்ள ஒரு குடிசைப் பகுதியில் குடியிருப்பாளர் ஒருவருக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தும் சுகாதாரப் பணியாளர். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை நான்கு மில்லியனைக் கடந்துவிட்டது.

அந்நாட்டில் கிருமித்தொற்று மெதுவடைவதாகத் தெரியவில்லை. அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக நான்கு மில்லியன் கிருமித்தொற்றுச் சம்பவங்களைப் பதிவு செய்துள்ள உலகின் மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 86,432 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,023,179ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு 80,000க்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்படுகிறது. வேறெந்த நாட்டிலும் ஒரே நாளில் இத்தனை பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதில்லை.

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கிருமித்தொற்று பாதிப்பால் 1,089 பேர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து கிருமித்தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,000ஐ நெருங்குகிறது.

உலகளவில் கிருமித்தொற்றால் இரண்டாவது ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடான பிரேசிலைவிட சுமார் 70,000 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மட்டும் குறைவாக இந்தியாவில் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் கொரோனா கிருமி இதே வேகத்தில் தொடர்ந்து பரவினால் உலகில் ஆக அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்களைப் பதிவு செய்த அமெரிக்காவையும் சிறிது காலத்தில் இந்தியா மிஞ்சிவிடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மூன்று மில்லியனில் இருந்து நான்கு மில்லியனாக அதிகரிக்க 13 நாட்கள் மட்டுமே ஆயின. அமெரிக்கா, பிரேசிலில்கூட கிருமித்தொற்று இவ்வளவு வேகமாக அதிகரிக்கவில்லை.

தரமான சுகாதார வசதிகள் இல்லாத கிராமப்புறப் பகுதிகளிலும் கிருமி பரவுவது அதிகாரிகளைக் கவலையடையச் செய்து உள்ளது. எனினும், புதுடெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களிலும் கிருமித்தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.

புதுடெல்லியில் மேலும் 2,914 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரே நாளில் இத்தனை பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை.

கிருமித்தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாக மகாராஷ்டிரா தொடர்ந்து உள்ளது. அந்த மாநிலத்தில் ஒரே நாளில் புதிய உச்சமாக 19,218 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

1.3 பில்லியன் பேர் மக்கள்தொகை கொண்ட இந்தியா முழுவதும் நாள்தோறும் பதிவாகும் கிருமித்தொற்றுச் சம்பவங்களில் கிட்டத்தட்ட கால்வாசி மகாராஷ்டிராவில்தான் பதிவாகின்றன.

இந்தியாவில் கிருமித்தொற்று நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வரும் பொருளியல் துறை பேராசிரியரும் முன்னாள் அரசாங்க ஆலோசகருமான டாக்டர் ஷமிகா ரவி, அந்நாட்டில் கிருமித்தொற்று "இன்னமும் உச்சத்தை நெருங்கவில்லை" என்று கருத்துரைத்தார்.

கொரோனா கிருமி பரவும் மையப்பகுதியாக உள்ள மகாராஷ்டிராவில் தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

"மகாராஷ்டிராவில் கிருமித்தொற்றை முதலில் கட்டுப்படுத்தாமல் இந்தியாவில் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது. நாட்டின் மற்ற பகுதிகளிலும் கிருமி பரவ அந்த மாநிலம் பெரும் காரணமாக விளங்குகிறது," என்று அவர் விவரித்தார்.

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் 22.5 மில்லியன் குடும்பங்களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்த அம்மாநில அரசு இயக்கம் ஒன்றைத் தொடங்கவிருக்கிறது.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 24 மணி நேரத்தில் ஆக அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.

இந்தியாவில் தற்போது கிருமித்தொற்று கண்டவர்களில் 62 விழுக்காட்டினர் இந்த ஐந்து மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்