கர்நாடகாவின் சிக்மகளூருவிலிருந்து, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 85 வயது ஆடவரை மைசூரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவசர சிகிச்சை வாகனத்துக்கு வழிவிடாமல் தகராறு செய்த கார் ஓட்டுநர் ஜெயந்துக்கு 11,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்த மாதம் 22ஆம் தேதி சந்திரசேகர் ஆச்சார்யா எனும் முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை ஏற்றிச் சென்ற அவசர சிகிச்சை வாகனம் இரவு 8.30 மணியளவில் பெலவாடி சாலைச் சந்திப்புக்கு வந்தது.
அங்கு சாலையின் நடுவே ஜெயந்த் என்பவர் காரை நடு ரோட்டில் நிறுத்தியிருந்தார்.
அவசர சிகிச்சை வாகனத்தின் சைரன் ஒலியைக் கேட்ட பிறகும் அவர் வழிவிடவில்லை.
அவசர சிகிச்சை வாகனத்தின் ஓட்டுநர் இறங்கிச் சென்று, வழிவிடுமாறு ஜெயந்திடம் கோரினார். ஆனால், ஜெயந்த் வாக்குவாதத்தில் இறங்கினார்.
சுமார் 15 நிமிட வாக்குவாதத்துக்குப் பிறகு, அவசர சிகிச்சை வாகனம் அந்த இடத்திலிருந்து நகர முடிந்தது.
ஆனால், மருத்துவமனைக்குச் சென்றதும், திரு சந்திரசேகரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் சற்று முன்பு உயிரிழந்துவிட்டதைத் தெரிவித்தார்.
இதன் தொடர்பிலான வழக்கில், அவசர சிகிச்சை வாகனத்துக்கு வழி விடாததற்காக ரூ. 10,000 அபராதமும் அபாயகரமாக வாகனம் ஓட்டியதற்காக ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.