இந்தியாவில் கொரோனா கிருமியின் ஆட்டம் அடங்கவில்லை.நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றது.
நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 90,632 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,065 பேர் தொற்றுக்குப் பலியாகிவிட்டனர் என்று புள்ளி விவரங்களை வெளியிட்ட சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
புதிய தொற்றுச் சம்பவங்களுடன் சேர்த்து இந்தியாவில் மொத்தம் 4,113,811 பேர் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கையும் 70,626ஐ எட்டியிருக்கிறது. நாடு முழுவதும் பரிசோதனைபரவலாக நடத்தப்பட்டாலும் கண்டுபிடிக்கப்படாத மேலும் 862,320 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இருப்பினும் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 3,189,865 பேர் முழுமையாக குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக மாதிரிகளை சேகரித்து சோதனைகளை தீவிரமாக்குவதில் இந்திய அரசு கவனம் செலுத்தியதால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் தொற்றுச்சம்பவங்கள் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
சென்ற சனிக்கிழமை வரையில் 48,831,145 (48 மி.) மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் சனிக்கிழமை அன்று மட்டும் 1,092,654 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகவும் இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் தெரிவித்தது.
கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக கொவிட்-19 கொடுமையில் சிக்கியிருக்கும் இந்தியா திக்குமுக்காடி வருகிறது.
தற்போது நான்காவது கட்ட தளர்வுகளை அது அறிவித்து வருகிறது.
தமிழகத்திலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் இன்றி லிருந்து மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் மெட்ரோ, புற நகர் மின்சார ரயில்களை இயக்க உத்தரவு இடப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் மக்கள் நடமாட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் காரணமாக கிருமித்தொற்று பரவக்கூடிய சாத்தியமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் உலகம் முழுவதும் கிருமித்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா தொடர்ந்து 3வது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவும் பிரேசிலும் கிருமித்தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் இரண்டு நாடுகளாகும்.