கேரளாவில் வாகனச் சோதனையின்போது நிகழ்ந்த பயங்கரம்; சிக்கியது 4.3 கிலோ தங்கம்

2 mins read
37ce573d-451f-4666-9397-f8ae09bec9be
பொதுப்படம்: ஊடகம் -

திருவனந்தபுரம்: கேரளாவில் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட வாகனச் சோதனை நடவடிக்கையின்போது 4.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னதாக கடத்தல் வாகனம், சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் மீது மோதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் அதிகாரிகள் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

கேரளாவில் தங்கக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது அம்பலமானது. இதுகுறித்து தேசிய புலனாய்வு முகைமை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

கடத்தல் தொடர்பாக இருபதுக்கும் மேற்பட்டோர் கைதாகியுள்ளனர். இந்நிலையில் மற்றொரு கடத்தல் சம்பவம் அங்கு அரங்கேறியுள்ளது.

நேற்று முன்தினம் கொச்சி மற்றும் கோழிக்கோடு மண்டல வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். வாகனங்கள் மூலம் பெரிய அளவில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கரிப்பூர் விமான நிலையம் அருகே அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அப்போது அவ்வழியே சென்ற ஒரு வாகனத்தை அதிகாரிகள் தடுத்து சோதனை மேற்கொள்ள முயன்றனர். ஆனால், அந்த வாகனம் வேகத்தைக் குறைக்காமல் அதிகாரிகள் மீது மோதிவிட்டுச் சென்றது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த வாகனத்தைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

வாகனம் மோதியதில் இரண்டு அதிகாரிகளும் ஓட்டுநர் ஒருவரும் காயமடைந்தனர். பின்னர் அந்த வாகனத்தைச் சோதனையிட்டபோது அதில் 4.3 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் இருப்பது தெரியவந்தது.

அவற்றைப் பறிமுதல் செய்ததுடன் வாகன ஓட்டுநரை அதிகாரிகள் கைது செய்தனர். இந்தக் கடத்தலில் வேறு யாருக்கு தொடர்புள்ளது எனும் கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

அதிகாரிகள் மீதே வாகனம் மோதிய சம்பவம் குறித்த செய்தி கேரள ஊடகங்களில் விரிவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.