புதுடெல்லி: கோவாக்ஸ் தடுப்பூசி திட்டத்தில் இணைவது தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தில் இணைய இந்தியாவுக்குத் தகுதி உள்ளது என அந்த நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ப்ரூஸ் அல்வார்ட் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா இத்திட்டத்தில் இணைவதை வரவேற்பதாகக் குறிப்பிட்டார்.
மற்ற உலக நாடுகளைப் போலவே தடுப்பூசித் திட்டத்தில் இந்தியாவும் இணைய முடியும். தடுப்பூசி தொடர்பாக இந்தியாவுக்குப் பரவலான அனுபவம் உள்ளது என்றார் ப்ரூஸ்.
கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பூசியை வாங்குவதிலும் விநியோகிப்பதிலும் உலக நாடுகளுக்கு உதவும் நோக்கத்தில் உலக சுகாதார அமைப்பும் பில்கேட்ஸ் நிறுவிய ஜிஏவிஐ தடுப்பூசி கூட்டமைப்பும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. கடந்த திங்கட்கிழமை கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையில் பிரேசிலை முந்தியது இந்தியா.
இந்நிலையில் தடுப்பூசித் திட்டத்தில் உலக சுகாதார அமைப்புடன் கைகோர்க்க இந்தியா முடிவு செய்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

