அகால மரணமடைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியும் நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு மும்பை பைகுல்லா சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
நடிகர் சுஷாந்த் சிங் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தமது அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது மரணத்தில் ரியாவுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதாக சுஷாந்தின் தந்தை பீகார் போலிசில் புகார் தெரிவித்தார்.
அதனடிப்படையில், ரியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. சிபிஐ, அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகிய 3 முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன. விசாரணையில், ரியாவுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. ரியாவிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த சில தினங்களாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நடிகை ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளால் மும்பையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மெய்நிகர் விசாரணையின்போது நடிகை ரியா அளித்த பிணை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவரை 14 நாட்கள் (செப்டம்பர் 22 வரை) நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மும்பை பைகுல்லா சிறைச்சாலையில் நடிகை ரியா அடைக்கப்பட்டார்.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் கடந்த வாரம் ரியா சக்ரபோர்த்தியின் தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சேமுவல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ரியா, அவரது சகோதரர் ஆகியோருக்கான பிணை கோரிக்கை இன்று விசாரணைக்கு வருகிறது.