புதுடெல்லி: நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா கிருமித்தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனையை செய்து கொள்வதற்கு மக்களிடையே தயக்கமும் பயமும் நிலவுவதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கிருமித்தொற்றுப் பரவல் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் கடைப்பிடிப்பதில்லை என சுகாதார அமைச்சின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குழு தலைவர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
"அப்பரிசோதனையை செய்துகொள்வதற்கு யாரும் அச்சப்படத் தேவையில்லை. கிருமித்தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனைக்குத் தாமாக முன்வர வேண்டும்.
"ஏனெனில் பரிசோதனைகள் அதிகரித்தால் மட்டுமே கொரோனா கிருமித்தொற்றை முற்றிலும் ஒழிக்கமுடியும்," என்று வி.கே.பால் கூறியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் அனைவரும் பின்பற்றவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பில் மக்களிடம் அலட்சியப் போக்கு இருப்பதாக பெரும்பாலான மாநிலங்களில் இருந்து தொடர்ந்து புகார்கள் வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையே இந்தியாவில் ஒரு மில்லியன் பேரில் 3,102 பேருக்குதான் கொரோனா கிருமித்தொற்றுப் பாதிப்பு உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலர் ராஜேஷ் பூஷன் கூறியுள்ளார்.
மேலும் ஒரு மில்லியன் பேரில் 53 பேர் மட்டுமே உயிரிழப்பதாகக் குறிப்பிட்ட அவர், பிற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இறப்பு விகிதம் மிகவும் குறைவு என்றார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் நாடு முழுவதும் 1.15 மில்லியன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 74 ஆயிரம் உயிர்களைப் பலிவாங்கியுள்ள கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.3 மில்லியனைக் கடந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மேலும் சுமார் 90 ஆயிரம் பேருக்கு கிருமி தொற்றியுள்ளது. மேலும் ஒரேநாளில் 1,115 பேர் உயிரிழந்துள்ளனர்.

