கொரோனாவுக்கு எதிரான ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை இந்தியா தயாரிக்க முன்வரவேண்டும் என ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்துப் பரிசீலித்து வருவதாக தேசிய தடுப்பூசி நிபுணர் குழுவின் தலைவர் வி.கே. பால் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா தயாரித்துள்ள தடுப்பூசியின் மூன்றாம்கட்ட பரிசோதனை மற்றும் உற்பத்தியை இந்திய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ள ரஷ்யா விரும்புவதாக அவர் கூறினார்.
இதுதொடர்பாக ரஷ்யாவுடன் நடந்துவரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட வி.கே.பால், ரஷ்ய அரசுடன் இணைந்து செயல்பட சில இந்திய நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
விரைவில் நல்ல முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் வி.கே. பால் கூறியுள்ளார்.
இதற்கிடையே ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் முயற்சியில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியால் மோசமான பக்கவிளைவு ஏற்படுவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அந்தத் தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற ஒருவருக்கு மிக மோசமான பக்க விளைவுகள் ஏற்பட்டதை அடுத்து பரிசோதனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி பரிசோதனைக்கு இந்தியா உள்ளிட்ட வேறு சில நாடுகளிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் மோசமான பக்கவிளைவு குறித்து தகவல் வெளியானதை அடுத்து இந்தப் பரிசோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.