இந்தியாவை உருக்குலைய வைத்துள்ளது கொவிட்-19 கிருமித்தொற்று. 24 மணி நேரத்தில் அங்கு 95,735 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியதுடன் 1,172 பேர் உயிரிழந்தனர்.
இத்துடன் இந்தியாவில் 75,000 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். மேலும் அங்கு 4.3 மில்லியனுக்கு மேலான கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
கிருமித்தொற்றின் மையப் பகுதியாகும் நிலையை நோக்கி இந்தியா சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னமும் அங்கு கிருமித்தொற்று உச்சத்தைத் தொட்டதற்கான அறிகுறி தென்படவில்லை.
மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகமான கிருமித்தொற்று சம்பவங்களும் உயிரிழப்புகளும் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பதிவாகின்றன. அத்துடன் முன்தினத்தின் எண்ணிக்கையை முறியடிக்கும் வகையில் மறுநாள் பதிவாகும் சம்பவங்கள் உள்ளன.
கொவிட்-19 கிருமிக்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில் கடந்த சில வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் பதிவாகின்றன. இந்நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது சற்று ஆறுதலாக உள்ளது.
உலகளவில் குறைந்தது 900,000 உயிர்களை கொவிட்-19 பலி கொண்டுள்ளது. அத்துடன் மொத்தத் தொற்று சம்பவங்கள் 28 மில்லியனைத் தாண்டிவிட்டன.
தொடர்ந்து கிருமித்தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. அங்கு கொவிட்-19 உயிரிழப்புகள் 195,000ஐ கடந்துவிட்டன. தொற்று சம்பவங்களும் 6.5 மில்லியனுக்கு மேல் சென்றுவிட்டன.

