போதைப் பொருள் விவகாரத்தில் கைதான நடிகைகள் சஞ்சனா, ராகினி இருவரும் பெங்களூரு போலிசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
போதைப்பொருள் விவகாரத்தில் 24 முக்கியப் பிரமுகர்களுக்குத் தொடர்புள்ளது என இருவரும் குறிப்பிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மும்பையைப் போன்று கன்னடத் திரையுலகிலும் பலருக்குப் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாகவும் சிலர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இயக்குநர் இந்திரஜித் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், கர்நாடக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது. அதன் முடிவில் நடிகை ராகினி திவேதியைக் கைது செய்தனர்.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கைகளை அடுத்து ராகினியின் நண்பர்கள் ஆறு பேர் கைதாகினர்.
அண்மையில் நடிகை சஞ்சனா கல்ராணியும் போலிசால் சுற்றிவளைக்கப்பட்டார்.
இதனால் கன்னடத் திரையுலகில் அடுத்து கைதாகப் போவது யார் எனும் பரபரப்பு நிலவுகிறது.
இந்நிலையில் ராகினி, சஞ்சனா ஆகிய இருவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது இரவு விருந்துகளில் போதைப்பொருள் புழக்கம் குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
யார் யார் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்கள்?, அவற்றை விநியோகிப்பது யார்?, எத்தனை நடிகர், நடிகைகள் இந்த விவகாரத்துடன் தொடர்பு கொண்டவர்கள்? என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இருவரும் விரிவாக பதிலளித்திருப்பதாக கன்னட ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இந்தி நடிகர் சுஷாந்த் சிங்குக்குப் போதைப்பொருள் வாங்கிக் கொடுத்தது உள்ளிட்ட காரணங்களால் கைதாகியுள்ள இந்தி நடிகை ரியா சக்ரபோர்த்தி, தமக்குப் பிணை வழங்கக்கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
போலிஸ் விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் தமது உயிருக்கு சிறையில் அச்சுறுத்தல் நிலவுவதாகக் கூறியுள்ளார்.

