ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘ஜென்னர் இன்ஸ்டிடியூட்’ மற்றும் ‘அஸ்ட்ராஜெனிகா’ நிறுவனம் இணைந்து கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தான ‘கோவிஷீல்டு’ மருந்தின் மருந்தகப் பரிசோதனைகள் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளதாக ‘சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா’ தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை சீரம் நிறுவனம் பெற்றிருந்தது.
கோவிஷீல்டு மருந்தின் 2வது கட்டம் மற்றும் 3வது கட்ட பரிசோதனைகளை இந்தியாவில் நடத்த சீரம் மருந்து நிறுவனம் தயாராகி ஆகஸ்ட் மாதம் இறுதியில் பரிசோதனையைத் தொடங்கியது.
பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷீல்டு தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட ஒருவருக்கு விளக்கமுடியா பக்கவிளைவு கடந்த வாரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மருந்தின் மருந்தகப் பரிசோதனை உடனடியாக பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு நேற்று முன்தினம் சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்துக்கு அறிக்கை அனுப்பி, விளக்கம் கோரியது.
இந்நிலையில், சீரம் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்துவதாகத் தெரிவித்தது.