திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக அம்மாநில உயர்கல்வி அமைச்சர் கே.டி.ஜலீலிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அரசின் விதிகளை மீறி துபாயில் இருந்து தூதரக பார்சல்கள் மூலமாக மத சார்புள்ள நூல்களை அனுப்பியது தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதால் அமைச்சர் ஜலீல் பதவி விலக வேண்டும் என கோரி நேற்று முன்தினம் கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் கேரள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் தனித்
தனியாகப் போராட்டம் நடத்தின. எதிரும் புதிருமான இவ்விரு கட்சிகளும் கேரள அரசை எதிர்ப்பதில் ஒரே நிலையைக் கடைப்பிடிக்கின்றன.
தங்கம் கடத்தல் விவகாரத்தில் அமைச்சர் ஜலீலை காப்பாற்ற முதல்வர் பினராயி விஜயன் முயல்வதாக இந்த இரு கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
ஏராளமான அரசியல் கட்சித் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.