புதுடெல்லி: நடிகர் சுஷாந்த் பணத்துக்காக குறி வைக்கப்பட்டிருக்கலாம் என்று அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தி இளம் நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் உள்ள தனது இல்லத்தில் ஜூன் 14ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். விசாரணையில், அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டியிருக்கலாம் அல்லது கொலை செய்திருக்கலாம் என போலிசார் சந்தேகித்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்கரபோர்த்தி உட்பட அவருக்கு நெருக்கமான சிலர் போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், ரியா சக்கரபோர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்கரபோர்த்தி உள்ளிட்ட 9 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் சுஷாந்த்தின் நண்பரான யுவராஜ் சிங், “நாங்கள் இருவரும் ஒன்றாக பல நடிப்புத் தேர்வுகளுக்குச் சென்றுள்ளோம். சுஷாந்த்துடன் எனக்கு ஏராளமான நினைவுகள் உள்ளன. இப்போது நடக்கும் போதைப்பொருள் விவகாரங்களைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. இதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த வழக்கைப் பார்க்கும்போது, அது திட்டமிட்டு சுஷாந்த் குறிவைக்கப்பட்டிருப்பது நன்றாக தெரிகிறது. பணத்துக்காகவும் முதலீடுகளுக்காகவும் சுஷாந்த்தை சிலர் குறிவைத்துள்ளனர் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. அவர் எப்போதும் மன உளைச்சலில் இருந்ததை நான் பார்த்ததில்லை,” என்று கூறியுள்ளார்.