அதிபர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உள்பட இந்தியாவைச் சேர்ந்த 10 ஆயிரம் முக்கியப் பிரமுகர்களை சீன நிறுவனம் ஒன்று உளவு பார்த்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவைச் சேர்ந்த ‘ஜென் ஹுவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி’ என்ற அந்த நிறுவனம் சீன அரசு மற்றும் அந்நாட்டு ராணுவத்துக்கு ஆதரவாகச் செயல்படும் நிறுவனம் என்பது தெரியவந்துள்ளது.
இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி உட்பட 30 நீதிபதிகளை அந்நிறுவனம் தனது உளவு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மலேசியா, இந்தோனீசியா உள்ளிட்ட மேலும் பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோரை ஜென் ஹுவா நிறுவனம் உளவு பார்த்திருப்பதை அடுத்து சம்பந்தப்பட்ட நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
இந்த உளவு மோசடிகளை அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டோபர் பால்டிங் என்ற பேராசிரியர் அம்பலப்படுத்தி உள்ளார். இவர் சீனாவிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சுமார் 9 ஆண்டுகள் வணிகவியல் பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்போது வியட்நாமில் பணியாற்றுகிறார்.
இந்தியாவைச் சேர்ந்த ‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘ஆஸ்திரேலியன் ஃபினான்சியல் ரிவ்யூ’, ‘டெய்லி டெலிகிராப்’ உள்ளிட்ட ஊடகங்கள் வாயிலாக சீன நிறுவனத்தின் உளவு ரகசியங்களை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான எஸ்.ஏ.போக்டே, நீதிபதி கான்வில்கார், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி சந்தீப் மேத்தா, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுனிதா அகர்வால், தற்போது பல்வேறு அமைப்புகளில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோரையும் சீன நிறுவனம் உளவு பார்த்துள்ளது.
ஜென் ஹுவா நிறுவனம் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தகவல் திரட்டும் மையங்களை நிறுவியுள்ளதாகவும் இவற்றின் மூலம் தினம்தோறும் சுமார் 150 மில்லியன் தரவுகள் திரட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சுமார் 2.5 லட்சம் பேரை அந்நிறுவனம் உளவு பார்த்துள்ளதாக பேராசிரியர் கிறிஸ்டோபர் கூறியதை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் 52 ஆயிரம் பேர், ஆஸ்திரேலியாவில் 35 ஆயிரம், இந்தியாவில் 10 ஆயிரம், கனடாவில் 5 ஆயிரம், மலேசியாவில் 1400 பேரை உளவு பார்த்துள்ள சீன நிறுவனம், இந்தியாவில் காலஞ்சென்ற முன்னாள் அதிபர்கள் பிரணாப் முகர்ஜி, அப்துல் கலாம் மற்றும் அவர்களுடைய உறவினர்களையும் கண்காணித்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும் ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகிய 5 முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரையும் விட்டு வைக்கவில்லை. நடப்பு மத்திய அமைச்சர்கள் மற்றும் 350 நடப்பு எம்பிக்கள் குறித்த தகவல்களையும் சீன நிறுவனம் திரட்டி உள்ளது.
மத்தியப் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் நடப்பு மற்றும் முன்னாள் முதல்வர்களை உளவு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ள ஜென் ஹுவா, மறைந்த முதல்வர் கருணாநிதியையும் கண்காணித்தது தெரியவந்துள்ளது.
இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதிகள் உட்பட 60க்கும் மேற்பட்ட பாதுகாப்புத் துறை அதிகாரிகள், நாட்டின் முன்னணி செய்தியாளர்களையும் ஜென் ஹுவா கண்காணித்தது என்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர்கள் ரத்தன் டாட்டா, கௌதம் அதானி, முன்னணி திரையுலகக் கலைஞர்கள் ஆகியோரை உளவு பார்த்ததாகவும் பேராசிரியர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
உளவு வளையம்: இந்தியாவில் 10 ஆயிரம் பேர்; உலகம் முழுவதும் 2.5 லட்சம் பேர்