கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் நிலைமை மேலும் மோசமடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் ரஷ்யாவையும் மரண எண்ணிக்கையில் ஸ்பெயினையும் அம்மாநிலம் பின்னுக்குத் தள்ளி உள்ளது.
மகாராஷ்டிராவில் இதுவரை 1.07 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 29,894 பேர் உயிரிழந்துள்ளனர். இது ஸ்பெயினில் உயிரிழந்தவர்களை விட அதிகமாகும்.
அதேபோல் ரஷ்யாவில் 1.06 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு நாடுகளில் ஏற்பட்ட பாதிப்பைவிட இந்தியாவின் ஒரு மாநிலம் மட்டும் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய நகரங்களின் பட்டியலில் பெங்களூரு மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பெங்களூருவில் இதுவரை 1.70 லட்சம் பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டிலேயே மராட்டிய மாநிலம் பூனேதான் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
அங்கு இதுவரை 2.32 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாமிடத்தில் உள்ள டெல்லியில் 2.18 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பட்டியலில் சென்னை 4ஆம் இடத்தில் உள்ளது.
எனினும் உயிரிழந்தோர் எண்ணிக்கை புனே, டெல்லி, சென்னையைவிட பெங்களூருவில் குறைவாக உள்ளது.