கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் இந்தியாவில் 64 மருத்துவர்கள் உள்பட 155 சுகாதாரப் பணியாளர்கள் உயிரிழந்தனர். செப்டம்பர் 11ஆம் தேதி வரையிலான தரவு இது.
சுகாதாரப் பணியாளர்கள் குறித்து மத்திய அரசு அதிகாரபூர்வமாக எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இந்திய மருத்துவக் கூட்டமைப்பு அவ்வப்போது அறிக்கை வெளியிட்டு வந்தது.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இதன் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணையமைச்சர் அஸ்வின் சவுபே எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
“மருத்துவம் என்பது மாநில அரசுகள் தொடர்புடையது என்பதால், மத்திய அரசு இது தொடர்பாக முழுமையான புள்ளிவிவரங்களைப் பராமரிக்கவில்லை. ஆனால், பிரதான் மந்திரி கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் நிவாரணம் கோரியவர்கள் குறித்து தேசிய அளவில் புள்ளிவிவரங்கள் பராமரிக்கப்படுகின்றன,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“மகாராஷ்டிராவில் 6 மருத்துவர்கள், குஜராத், மேற்கு வங்கத்தில் 14 மருத்துவர்கள், அருணாச்சலப் பிரதேசத்தில் 12 மருத்துவர்கள், தமிழகத்தில் 10 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.
“கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் பணியில் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மருத்துவர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
“கோவிட்-19 அவசர நிதி மற்றும் தயாரிப்புப் பணிக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. மாநிலங்களுக்குத் தேவையான 9.81 கோடி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்கப்பட்டன, 28,476 வென்டிலேட்டர்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன’’, என்றும் திரு அஸ்வின் சவுபே தெரிவித்தார்.