இந்தியாவின் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் 5 மில்லியனைத் தாண்டின. வெறும் 11 நாட்களுக்குள் ஒரு மில்லியன் புதிய சம்பவங்கள் இங்கு பதிவாகி கவலைக்குரிய உலகச் சாதனையாகிவிட்டது.
அதிக எண்ணிக்கையிலான கொவிட்-19 சம்பவங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ள நிலையில், இந்தியா இரண்டாவது நிலையில் உள்ளது. இருப்பினும் சில காலமாகவே இந்தியா ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்துடன் அதிகமான கொவிட்-19 சம்பவங்களைப் பதிவு செய்து வருகிறது.
.
இன்று புதிதாக 90,000க்கு மேலானோருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.
மேலும், தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் இன்று 1,290ஆக பதிவாகியது.
ஒரு மில்லியன் கிருமித்தொற்று சம்பவங்களைத் தாண்ட, இந்தியா 167 நாட்கள் பிடித்தது. அடுத்த மில்லியனைத் தொட, 21 நாட்கள் எடுத்தன. அமெரிக்கா, பிரேசில் நாடுகளை விட இது வேகமாக நடந்ததாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ தெரிவித்திருந்தது.
தொடர்ந்து 29 நாட்களில் மேலும் இரண்டு மில்லியன் புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. இம்மாதத் தொடக்கத்தில் கிருமித்தொற்று சம்பவங்களில் பிரேசிலை மிஞ்சியது இந்தியா. அதன் பின்னர் இப்போது 11 நாட்களிலேயே அடுத்த மில்லியனும் பதிவாகிவிட்டது.
இந்நிலையில் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு மில்லியன் கிருமித்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது போதாது என்கின்றனர் நிபுணர்கள். தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்பது அவர்களின் கருத்து.
தான் மேற்கொண்ட ஆய்வில் இவ்வாண்டு மே மாதமே 6.5 மில்லியன் மக்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டனர் எனத் தெரிய வந்ததாக இந்தியாவின் முன்னணி கொள்ளைநோய் அமைப்பு தெரிவித்தது.
இதுவரை இந்தியாவில் கொரோனா பிடியில் சிக்கி இறந்தோரின் எண்ணிக்கை 82,100ஐத் தாண்டிவிட்டது. இது அமெரிக்காவின் உயிரிழப்புகளின் பாதிகூட இல்லை என்று கூறப்பட்டது.