வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐகள்) இவ்வாண்டு ஏப்ரல் மாதத்திற்கும் ஜூலை மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவுக்கு $4.6 பில்லியன் வெள்ளியை ஈட்டித் தந்துள்ளனர். சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் என்ஆர்ஐகள் இந்தியாவுக்குக் கொண்டுவந்த தொகையைவிட இது 50% அதிகம் என்று கூறப்படுகிறது.
பெரும்பாலான நாடுகள் மிகக் கடுமையான முடக்கநிலை கட்டுப்பாடுகளுடன் உள்ள சூழலிலும் என்ஆர்ஐகள் இவ்வாறு கூடுதல் தொகையை ஈட்டியது சாத்தியமாகியுள்ளதாக ‘ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா’வின் அண்மையத் தகவல்கள் கூறுகின்றன. இந்தத் தொகையை சேர்த்து என்ஆர்ஐகளின் மொத்த வைப்புத் தொகை ஜூலை மாத நிலவரப்படி $135.36 பில்லியனை எட்டியுள்ளது. மார்ச் மாதத்தில் இது $130.58 பில்லியனாக இருந்தது. இதற்குமுன் 2019ல் $133.12 பில்லியனாகவும் 2018ல் $124.44 பில்லியனாகவும் இருந்தது.
தொகையின் பெரும்பகுதி வளைகுடா நாடுகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டது. இவ்விடங்களில் என்ஆர்ஐகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதே காரணம். முடக்கநிலை ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து பல வளைகுடா நாடுகளில் ஆட்குறைப்பும் சம்பளக் குறைப்பும் இருந்தன. வட்டி விகிதங்களும் பெரும்பாலான நாடுகளில் சரிந்தன. இதனால் கூடுதல் பணவரவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.