தீவிரவாதிகளுக்குப் பயிற்சியளிப்பதை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பெருமையுடன் ஒப்புக்கொண்டுள்ளார் என இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியப் பகுதிகளை இணைத்து பாகிஸ்தான் வெளியிட்ட வரைபடத்துக்கு இந்தியா கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
மேலும் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டத்திலிருந்து இந்தியப் பிரதிநிதி வெளிநடப்பு செய்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு ரஷ்யா தலைமையில் நடைபெற்றது. இதில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தின்போது பாகிஸ்தான் பிரதிநிதி இந்தியாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளை பாகிஸ்தானின் பகுதிகளாகக் காட்டும் வரைபடத்தைப் பயன்படுத்தினார்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த இந்தியா அந்தக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தது.
பாகிஸ்தானின் இந்தச் செயல்பாடு அப்பட்டமான அத்துமீறல் என மத்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
கூட்டத்தை நடத்தும் தலைமையின் ஆலோசனையை அப்பட்டமாகப் புறக்கணிப்பது விதிமுறைகளை மீறிய செயல் என்றும் பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்வதற்கு முன் இந்தியத் தரப்பில் உரிய ஆலோசனை நடத்தப்பட்டது என்றும் அனுராக் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.