கொரோனா கிருமித்தொற்று சூழலில் வளைகுடா மற்றும் கிழக்காசிய நாடுகளில் சிக்கித் தவித்தவர்களில் 83,348 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் நேற்று மக்களவையில் தெரிவித்தார்.
இதன் மீது முஸ்லீம் லீக்கின் தமிழக எம்.பியான திரு கே.நவாஸ்கனி எழுப்பிய கேள்விக்கு இந்திய வெளியுறத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் அளித்த எழுத்துபூர்வ பதிலில், “கொரோனா பரவல் ஊரடங்கு தளர்விற்குப் பின் வெளிநாடுகளில் சிக்கியவர்களை மீட்க மத்திய அரசு, தொடங்கிய ‘வந்தே பாரத் மிஷன்’ செயல்பாட்டில் தற்போது ஆறாவது கட்டம் நடப்பில் உள்ளது. இதுவரை சுமார் 13 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 83,348 பேர் தமிழர்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூர், பஹ்ரைன், ஈராக், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், மலேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், தென்கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து அவர்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.