தெற்கு ரயில்வேயில் தொழில்நுட்ப வல்லுநருக்கான தேர்வை தமிழில் எழுதியவர்களில் 5.4 விழுக்காட்டினருக்கு மட்டுமே பணி கிடைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக எம்பி வெங்கடேசன் நேற்று முன்தினம் மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், தெற்கு ரயில்வேயில் தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு இந்தியில் தேர்வு எழுதியவர்களில் 66 விழுக்காட்டினர் தேர்வாகி உள்ளதாகக் குறிப்பிட்டார்.
“மொத்தமுள்ள 2,086 பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெற்றது. அவற்றுள் 1,686 இடங்களை இந்தியில் தேர்வு எழுதியவர்கள் பெற்றுள்ளனர். தமிழில் தேர்வு எழுதியவர்களில் 139 பேர் மட்டுமே தொழில்நுட்ப வல்லுநர் பணிக்குத் தேர்வாகினர். இது மொத்த பணியிடங்களில் 5.4 விழுக்காடு,” என்றார் அமைச்சர் பியூஷ் கோயல்.
தெற்கு ரயில்வேயில் உள்ள வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் அண்மையில் தெற்கு ரயில்வேயின் சரக்கு வண்டி பாதுகாவலர் பணியிடங்களை நிரப்ப துறை சார்ந்த தேர்வு நடைபெற்றது. இதிலும் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதாக அதிருப்தி நிலவுகிறது.
96 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வில் தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்துவரும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்களில் மூவாயிரம் பேர் தமிழர்கள்.
எனினும் தேர்வு எழுதிய தமிழர்களில் 5 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மற்ற அனைவரும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.