ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பிரபல இந்திய நிறுவனமான நைன் விளம்பரதாரர் ஆகியுள்ளது.
இது மாதவிடாய்ப் பட்டைகளை தயாரிக்கும் பிரபல நிறுவனமாகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் இந்நிறுவனத்தின் சின்னம் பதிக்கப்பட்ட சீருடையை போட்டிகள் நடைபெறும்போது அணிந்திருப்பர்.
இதன் மூலம் மாதவிடாய் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதவிடாய்ப் பட்டை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று கிரிக்கெட் அணிக்கு விளம்பரதாரர் ஆகியிருப்பது இதுவே முதன் முறை என்றும் கூறப்படுகிறது.
மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு உலகெங்கிலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைச் செயல் அதிகாரியான ஜேக் லஷ் தெரிவித்துள்ளார்.
“இந்தியா உட்பட பல நாடுகளில் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை,” என்று ஜேக் லஷ் மேலும் கூறியுள்ளார்.
தெற்காசியாவில் மாதவிடாய் என்பது வெட்கக்கேடானது, அசௌகரியமானது என்ற கருத்து வயதுக்கு வந்த பெண்களிடம் அதிகம் உள்ளது.
இந்தியாவில் மாதவிடாய் பருவத்தை எட்டியுள்ள சுமார் 350 மில்லியன் பெண்களில் சுமார் 8 மில்லியன் பேர் மட்டுமே மாதவிடாய் பட்டைகளைப் பயன்படுத்துவதாகச் சொல்கிறது நைன் நிறுவனம். பல பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுகாதாரமற்ற முறையில் செயல்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள நைன் நிறுவனம், கிரிக்கெட் அணிக்கு விளம்பரதாரராவதன் மூலம் மாதவிடாய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என நம்புவதாகத் தெரிவித்துள்ளது.