கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட சான்றிதழ்களுடன் இருவர் கடந்த சில வாரங்களில் இந்தியாவிலிருந்து துபாய்க்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதை அடுத்து, ஏர் இந்தியா விமானங்களை இரு வாரங்களுக்கு துபாய் தடை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு சிற்றரசுகளின் விதிப்படி, இந்தியாவிலிருந்து அங்கு பயணம் செய்வோர் பயணத்துக்கு 96 மணி நேரத்துக்கு முன்பு RT-PCR பரிசோதனைகளுக்கு உட்பட்டு, கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் சான்றிதழை வைத்திருப்பது அவசியம்.
ஆனால், இந்தியாவின் ஜெய்ப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் இம்மாதம் 4ஆம் தேதி துபாய்க்கு சென்ற பயணி ஒருவர் செப்டம்பர் 2ஆம் தேதி பெறப்பட்ட கொவிட்-19 பரிசோதனை சான்றிதழில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த நிறுவனத்தின் மற்றொரு விமானம் மூலம் துபாய்க்கு சென்ற மற்றொரு பயணியும் கொவிட்-19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட சான்றிதழ் வைத்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விதிமீறல்கள் காரணமாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இன்று முதல் அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக துபாய் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி, ஜெய்ப்பூர் நகரங்களிலிருந்து முறையே ஆகஸ்ட் 28, செப்டம்பர் 4 தேதிகளில் துபாய்க்கு சென்ற விமானப் பயணிகளை இந்திய விமான நிலையங்களில் கையாண்ட முகவர்கள் தவறுதலாக அனுமதித்ததன் தொடர்பில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.