இந்தியாவின் இமாச்சல பிரதேசத்தையும் லடாக் பகுதியையும் இணைக்கும் ரோதங் குகை பாதையை இம்மாத இறுதியில் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
சீனா- இந்தியா எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்து வரும் வேளையில் இச்செய்தி வெளிவந்துள்ளது.
அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் இரு தரப்பும் எல்லையில் படைகளைக் குவித்து வருகின்றன. இந்தியா முன்னணிகளில் மட்டுமின்றி, சாலைகள், பாலங்கள், ஹெலிகாப்டர் இறங்கு தளங்கள் என இதர பல காரியங்களையும் வேகப்படுத்தி வருகிறது.
ஏறக்குறைய ரூ.3,200 கோடி (542.7 மி. சிங்கப்பூர் வெள்ளி) செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப் பாதை இந்தியாவிலேயே மிக நீளமானது. ஒன்பது கிலோ மீட்டர் நீளமான இப்பாதை, பொறியியல் ஆற்றலின் உச்சநிலையை வெளிப்படுத்துவதாக உள்ளது.
ராணுவமும் பொதுமக்களும் எந்த பருவநிலை காலத்திலும் பயணம் செய்ய வசதியான இப்பாதை, கடல் மட்டத்தில் இருந்து 3,000 மீட்டர் உயரத்தில் மலைகளைக் குடைந்து கட்டப்பட்டுள்ளது.
மணாலி - லே செல்ல தேசிய நெடுஞ்சாலை உள்ளது. ஆனால், கடும் பனிப்பொழிவு, நிலச்சரிவு காரணமாக ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே இந்த சாலை போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும். மேலும், மணாலி - லே செல்ல 474 கி.மீ. தூரம் மலைகளைச் சுற்றிப் பயணிக்க வேண்டும். அடல் குகை பாதை இந்த தூரத்தில் 46 கிலோ மீட்டரைக் குறைந்துவிடும். பயண நேரமும் வெகுவாகக் குறையும். இதன்மூலம் எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்கள் விரைந்து செல்ல முடியும்.
700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள், இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். ஒரு நாளைக்கு ஏறக்குறைய 3,000 வாகனங்கள் செல்லும் அளவுக்கு பாதை பலமானது.