லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் சுற்றுக்காவல் மேற்கொள்வதை உலகின் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை ஏப்ரல் முதல் நீடிக்கிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் மத்திய அரசு விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் விவாதம் நடத்த கோரிக்கை விடுத்தன.
எல்லைப் பிரச்சினை பற்றி மக்களவையில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘சீனா உடனான எல்லைப் பிரச்சினையில் அமைதியான முறையில் சுமூகமான தீர்வு காண இந்தியா விரும்புகிறது. அதே நேரம், போரிடவும் தயாராக இருக்கிறது,’ என்று தெரிவித்தார்.
கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காக்கில் 8 கி.மீ. தூரம், பிங்கர் 8 ஆகிய பகுதிகளில் முன்பு போல வழக்கமான சுற்றுக்காவலில் ஈடுபட இந்திய வீரர்களை சீனப்படையினர் அனுமதிப்பதில்லை என்றும் அவர்களை சீனப்படையினர் தடுத்து வருகின்றனர் என்றும் அடுத்த நாள் விவாதத்தில் அமைச்சர் குறிப்பிட்டார்.
எல்லையைப் பொறுத்தவரை சீனா சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக உள்ளது என்று தெரிவித்த அமைச்சர், லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் சுற்றுக் காவலில் ஈடுபடுவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.