அகாலி தள அமைச்சர் பதவி விலகினார்; போராட்டம் தீவிரமடையும் என கடும் எச்சரிக்கை
இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இருக்கும் புதிய வேளாண் மசோதாக்கள் பிரதமர் மோடியின் அரசாங்கத்திற்கு மேலும் ஒரு கடுமையான சோதனையாக அமையும் என்று நம்பப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பாஜக கூட்டணி கட்சிகளும் அந்த மசோதாவை எதிர்க்கத் தொடங்கி இருக்கின்றன. மூன்று வேளாண் மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் ஒருவர் பதவி விலகிவிட்டார்.
வரும் நாட்களில் விவசாயிகள் பெரும் போராட்டத்தைத் தொடங்குவார்கள் என்று தெரிகிறது.
பாஜகவுக்கு மிகவும் அணுக்கமாக இருந்து வந்துள்ள சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த உணவு பதனீட்டுத் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கோர் பாதல் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிவிட்டார்.
விவசாயிகள் விளைபொருள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (வளர்ச்சி மற்றும் வசதி) மசோதா, விவசாயிகள் (அதிகாரம் வழங்குதல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத மற்றும் வேளாண் சேவைகள் மசோதா 2020 ஆகிய இரண்டு மசோதாக்கள் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
ஏற்கெனவே அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதாவையும் நிறைவேற்றியது. இந்த மசோதாக்கள் முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கின்றன என்றும் விவசாயிகளை அடிமைப்படுத்திவிடும் என்றும் எதிர்த்தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய வகைசெய்யும் இந்த மசோதாக்கள், பெரும் பெரும் முதலாளிகள் கொழிப்பதற்கு வழிவகுத்துவிடும் என்றும் அவர்களிடம் விவசாயிகள் நிலத்தை இழந்து நிற்கக்கூடிய ஆபத்துள்ளதாகவும் எதிர்த்தரப்பினர் கூறுகிறார்கள்.
இந்த நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாய சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, தமிழ்நாடு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே பல்வேறு விவசாய அமைப்புகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதனிடையே, வேளாண் மசோதா விவகாரத்தில் விவசாயிகளைத் தவறாக வழிநடத்த முயற்சி நடப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, புதிய மசோதாக்களை வரவேற்றுள்ளார்.
கொவிட்-19, சீனாவுடன் எல்லை பிரச்சினை, வரலாறு காணாத பொருளியல் இறக்கம், மாபெரும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற கடுமையான சவால்களை எதிர்நோக்கி வரும் மத்திய அரசுக்கு இந்த வேளாண் மசோதாக்கள் மற்றொரு சோதனையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.